கோவை: கோவையில் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சுந்தராபுரத்தை அடுத்த குறிச்சி ஜி.கே.ஸ்கொயரில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் பாரதி மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து தொடர்ந்து தரக்குறைவாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் ஆர்.எஸ்.பாரதியின் காரை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை மாதம் இருமுறை வெளியாகும் ஒரு பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் மொபைல் போனில் பதிவுசெய்தார். ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் சிலர் அவரது மொபைல் போனைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்தனர். தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அவரை தாக்க முற்பட்டனர். இதையடுத்து செய்தியாளர் அங்கிருந்து சென்றார்.
பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நான் பத்திரிக்கையாளராக இருக்கிறேன். அங்கு நடந்த நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும்போது தி.மு.க.வைச் சேர்ந்த 94-வது வார்டு பொறுப்பாளர் காளிமுத்து, பூங்கா நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன், சந்திரசேகர் மற்றும் பெஞ்சமின், முத்தலிப் ஆகியோர் என்னை கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டனர். செல்போனை உடைத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்தலிப் தவிர மற்ற 5 பேரை கைது செய்தனர். கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சேனாதிபதி, குறிச்சி வடக்குப்பகுதி பொறுப்பாளர் உள்பட பலர் நேற்று காலை காவல் நிலையம் முன் கூடினர். அவர்கள் சார்பிலும் புகார் தரப்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.