நீலகிரி: நீலகிரியில் வரும் 19ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரியில் வரும் 19ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு வருகிற 19.01.2021 முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ ஆகிய 218 பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதில் 10ம் வகுப்பு 9,636 மாணவ, மாணவியர்களும், 12ம் வகுப்பில் 8,398 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 18,034 மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருகை தர உள்ளார்கள்.
தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, கொரோனா தொற்று வழிமுறைகளை சம்மந்தப்பட்ட பள்ளிகளில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் / பணியாளர்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் முககவசங்களை கட்டாயமாக அணிவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல, பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக கிருமி நாசினி கொண்டு பள்ளி வளாகம், கைபிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய உள்ளாட்சி துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளில் சானிடைசர் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் மூலம் மாணவ, மாணவியர்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும். மேலும் பல்ஸ் ஆக்சிமீட்டர்களும் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை பள்ளி திறப்பதற்கு முன்பே சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அரசு தெரிவித்துள்ளபடி, ஒரு வகுப்பறையில் 25 மாணவ, மாணவியர்களை அமர்த்தி கல்வி பயில செய்ய வேண்டும். கூடுதலாக மாணவர்கள் இருப்பின் மற்றொரு வகுப்பறையை தயார் செய்து கல்வி கற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, கொரோனா தொற்று அறிகுறி ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியர்களை தனியாக ஒரு அறையில் அமர வைத்து, பின்னர் சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் உணவு உண்ணும் நேரத்தில் முககவசத்தை அப்புறப்படுத்தி மீண்டும் அணிவதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், பள்ளிகள் திறக்கும் நாளிலிருந்து, மாணவ, மாணவியர்கள் பெயர், வகுப்பு, உடல் வெப்பநிலை, ஏதேனும் அறிகுறிகள், பல்ஸ் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட விவரங்களை கொண்ட பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் தேவையான அளவு குப்பை தொட்டிகள் வைத்திருக்க வேண்டும்.
மேலும், போதுமான அளவு முககவசங்கள் வைத்திருக்க வேண்டும். வகுப்புகள் துவங்கிய உடன் கொரோனா தொற்று நோய் குறித்து மாணவ, மாணவியர்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும். நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்த பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு குடிநீர் வழங்கிட உள்ளாட்சித் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், இணை இயக்குநர் (மருத்துவ நல பணிகள்) பழனிசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.