கோவை: எங்களது அரசாங்கம் தொழிலதிபர்களுடன் மிகவும் நட்பாக இருக்கும் எனவும் தொழில் துவங்குவதற்கான அனுமதி எளிதாக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கோவை: எங்களது அரசாங்கம் தொழிலதிபர்களுடன் மிகவும் நட்பாக இருக்கும் எனவும் தொழில் துவங்குவதற்கான அனுமதி எளிதாக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஐந்தாம் கட்ட பரப்புரையின் போது, மக்களிடம் பேரெழுச்சியை பார்க்கிறோம், இது சந்தோஷமாக இருக்கின்றது என்றார்.
அதேபோல, எங்கள் கட்சி பல்வேறு சிறப்பு முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம் தொழிலதிபர்களுடன் மிகவும் நட்பாக இருக்கும் என்றவர், தொழில்துறை புரட்சி 4.0 எங்கள் முக்கிய மையமாக இருக்கும் எனவும் தொழிலதிபர்களுடன் ஒருங்கிணைந்த பணிகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 'எம்.எஸ்.எம்.இ' ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே இந்த துறையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக அக்கறை காண்பிப்போம் என்றவர், இது தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முதலீடுகள் தொடர்ந்து வர உதவும் என்று கூறினார்.
மேலும், மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், அது தகவல் தான் என்றும் அதை நான் சொல்லவில்லை எனவும் அவர் கூறினார்.
அதேபோல, எங்கள் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் சாதியை பார்க்காமல் சாதனைகளில் கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார்.