கோவை: கோவையில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டம் கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு செவிசாய்க்காத மத்திய அரசைக் கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் டெல்லி சென்று இன்று வரை விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தின்போது 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு விதித்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பின்பும் டெல்லியில் விவசாயிகள் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு செல்லமாட்டோம் என தொடர்ந்து பனியிலும், குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, அன்னூர், பேரூர், நரசிபுரம், தொண்டாமுத்தூர், சுந்தராபுரம், சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போகிப் பண்டிகை நாளில் சட்ட நகலை எரித்து கொண்டாட வேண்டுமென விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று காலையில் இருந்தே தாத்தா, பேரன், பாட்டி, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வேளாண் சட்ட நகலை எரித்து தங்களது கண்டனங்களை அமைதியான முறையில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.