திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மகள் கண்முன்னே தாய் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மகள் கண்முன்னே தாய் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் மாசித். இவருடைய மனைவி சுருதி (25). இவர்களுடைய மகள் ஆதிரா (1). மாசித் திருப்பூரில் கோவில் வழி பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இதனிடையே, சுருதி தனது அம்மா சந்திரிகா (45) மற்றும் மகள் ஆதிராவுடன் ஸ்கூட்டரில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஜவுளி கடைக்கு துணி எடுக்க வந்துள்ளார். பின்னர், ஜவுளி கடைக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் 3 பேரும் கீழே விழுந்தனர்.
விபத்தில் சந்திரிகாவின் இடுப்புப்பகுதியில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. அதிர்ஷ்டவசமாக சுருதியும், ஆதிராவும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தனது கண் முன்னே தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து சுருதி கதறித் துடித்தார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் சந்திரிகாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சந்திரிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் நடந்த பகுதியில் ஒரு கடையின் முன்பு பொருத்தி இருந்த இரகசிய கண்காணிப்பு கேமராவில் விபத்து வீடியோ காட்சியாக பதிவாகி இருந்தது. அதில் ஸ்கூட்டரில் இருந்து 3 பேரும் விழுவதும், சந்திரிகா மீது பஸ் சக்கரம் ஏறி இறங்குவது போன்ற நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.