கோவை: அமைச்சர் வேலுமணி தனது அட்டூழியத்தை நிறுத்தாவிட்டால், கோவையில் அ.தி.மு.க. தரைமட்டமாகும், என்று திமுக மாவட்ட பொருளாளர், சி.ஆர்.ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: அமைச்சர் வேலுமணி தனது அட்டூழியத்தை நிறுத்தாவிட்டால், கோவையில் அ.தி.மு.க. தரைமட்டமாகும், என்று திமுக மாவட்ட பொருளாளர், சி.ஆர்.ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூரில் கடந்த 2-ந்தேதி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அ.தி.மு.க வை. சேர்ந்த பெண் ஒருவர் கேள்வி எழுப்புவது போல் நாடகமாடி சலசலப்பை ஏற்படுத்த முயன்றார். அதனால், அந்தப் பெண் பாதுகாப்பாக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார், என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பிரச்சினையை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், அமைச்சர் எஸ்பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க.வினரின் தூண்டுதலின்பேரில் தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர், என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் செயலைக் கண்டித்து, இன்று கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பூலுவம்பட்டியில் மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதைத்தொடர்ந்து, திமுக மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், "தலைவர் கலந்துகொண்ட மக்கள் கிராமசபையில் திட்டமிட்டு ஒரு பெண்ணை அனுப்பி வைத்து கலகம் செய்ய நினைத்தனர். இது மக்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது, வேண்டுமென்றே, தி.மு.க. நிர்வாகிகள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த பொய் வழக்கு, அமைச்சர் வேலுமணியின் அராஜகம், அட்டூழியம்", என்றார்.
"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுடன் அமைச்சர் வேலுமணி இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இவர் தனது அட்டூழியத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையேல், கோவையில் அ.தி.மு.க. தரைமட்டமாகி விடும், என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்", என்றார்.
மக்கள் கொதித்துப்போய் உள்ளனர் என்றும் அதிமுக ஆட்சியில் பொய்யும், பித்தலாட்டமும் அதிகரித்துள்ளது, என்று கடுமையாக சாடினார்.