கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்க முயற்சித்துள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்க முயற்சித்துள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கோவை காட்டூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை காலம் கடந்து கைது செய்திருந்தாலும் பாராட்டுக்குரியது என்றனர். ஆளும் கட்சி குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது எனவும், அரசியல் பின்பலம், பணபலம், காவல் துறை ஆதரவு இல்லாமல் இத்தகைய குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ்வழக்கின் பின்புலத்தில் முக்கியஸ்தர்கள் இருப்பார்கள் எனவும், இவ்வழக்கில் சிபிஐ முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். பொள்ளாச்சி காவல் துறையினர் சாட்சிகளை பாதுகாப்பதற்கு பதிலாக, கலைக்க முயற்சித்தது எனவும், இவ்வழக்கு மெத்தனமாக நடக்க காவல் துறையினர் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், அதிமுக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்துள்ளது என்று தெரிவித்தனர்.
அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜன் உள்ளிட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி, பொள்ளாச்சியில் வருகின்ற 10 ம் தேதி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
மேலும், பார் நகராஜன், ஆட்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், பகோதிபாளையம் வசந்தகுமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் எனவும், இவ்வழக்கில் காவல் துறையினர் விசாரணை செய்து விடுவித்தவர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அரசியல் அழுத்தம் இல்லாமல் சிபிஐ நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்சம்பவங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், பெண்கள் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பாக மாவட்டந்தோறும் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.