கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் சி.பி.ஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை: கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தை கூறி சொகுசு காரில் அழைத்துச் சென்று பங்களாக்களில் வைத்து உல்லாசம் அனுபவித்து, பின் அவர்களை அடித்து துன்புறுத்தி, வீடியோவை மறைமுகமாக எடுத்து, மிரட்டிய சம்பவம், தமிழ்நாட்டையே அச்சத்தில் ஆழ்த்தியது.
பல்வேறு சமூக அமைப்புகள், மாதர் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் மட்டுமே வாக்குமூலம் அளிக்க முன் வந்தார். அதன் விளைவாக 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று எதிர்பாராத திருப்பமாக அ.தி.மு.க பிரமுகர் அருளானந்தம் உட்பட 3 பேரை, சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள், கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன், பின்னணியில் பாதிக்கப்பட்ட இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர், என்று கூறப்படுகிறது. அவர்கள் சந்தித்த கொடுமைகளை வாக்குமூலமாக தெரிவித்ததை அடுத்து, சிபிஐ அருளானந்தம் உட்பட 3 பேரை தீவிரமாக விசாரித்து கைது செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது, மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, பாதிக்கப்பட்டு வெளியில் வராத பெண்கள் துணிந்து வந்து தங்களுடைய வாக்குமூலங்களை அளித்து உண்மை குற்றவாளிகளுடைய முகத்திரையை கிழிக்க உதவ வேண்டும், என்பதே பொது மக்கள் மற்றும் மாதர் சங்கத்தினரின் கோரிக்கையாக உள்ளது.