கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு அ.தி.மு.க பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு அ.தி.மு.க பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), பாபு (எ) பைக் பாபு (27) மற்றும் அருளானந்தம் (34 ) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்திற்குள் இருந்து வெளியே அழைத்து வருகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் கோவை நீதிமன்றத்தின் ஒன்றாவது வாயில் முன்பு அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும், உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்றம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹெரன் பால் ஆகிய மூவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.