கோவை: வேலைபோன விரக்தியில் தகராறு செய்ததுடன் கத்தியால் குத்திய வாலிபரை பஞ்சாயத்து துணைத் தலைவரின் மனைவி தனது தந்தையுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கோவை: வேலைபோன விரக்தியில் தகராறு செய்ததுடன் கத்தியால் குத்திய வாலிபரை பஞ்சாயத்து துணைத் தலைவரின் மனைவி தனது தந்தையுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் கணேசன். தி.மு.க.வைச் சேர்ந்த இவர் வெள்ளமடை ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி துளசிமணி (வயது 38). கணேசன் அந்தப் பகுதியில் கோழிக்கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் ஜோதி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 25) என்பவர் வேலைபார்த்து வந்தார்.
கடைக்கு வரும் கணேசன் அங்கிருந்தபடி நண்பர்களுடன் மது குடிப்பது மற்றும் வெளியே சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கணேசனின் நடவடிக்கை குறித்து சுரேஷ்குமார் அவரது மனைவி துளசிமணியிடம் தெரிவித்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சுரேஷ்குமார் தனது மனைவியிடம் தன்னைப் பற்றி குறை சொல்வதை அறிந்த கணேசன் இரண்டு நாட்களுக்குமுன் அவரை வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் சுரேஷ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்தார். அவர் தன்னை கணேசன் வேலையை விட்டு நீக்கியது குறித்து துளசிமணியிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கணவர் கணேசனிடம் கேட்டபோது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து துளசிமணி கணவரிடம் கோபித்துக் கொண்டு பெரியமத்தம் பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் வேலை பறிபோனதால் விரக்தி அடைந்த சுரேஷ்குமார் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இரவு அவர் துளசிமணியின் தந்தை நாகராஜனின் வீட்டுக்குச் சென்றார். அங்கு துளசிமணியிடம் உங்களால்தான் என் வேலை போனது எனக் கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. துளசிமணியின் தந்தை நாகராஜ் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜை குத்தினார். இதில் அவரது தலை, கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அதிர்ச்சி அடைந்த துளசிமணி தனது தந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது சுரேஷ்குமார் அவரையும் கத்தியால் குத்தினார். இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டத. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து போதையில் இருந்த சுரேஷ்குமாரை கீழே தள்ளினர். பின்னர் அங்கு கிடந்த பெரிய கல்லை தூக்கி சுரேஷ்குமாரின் தலையில் போட்டனர். இதில் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய நாகராஜ், துளசிமணி ஆகியோரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி குமார் கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.