கோவை: கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த 5 ஆண்டில் அபார வளர்ச்சியடைந்துள்ளது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த 5 ஆண்டில் அபார வளர்ச்சியடைந்துள்ளது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி அ.தி.மு.க.வைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைக் கண்டித்தும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதைக் கண்டித்தும் கோவை தொண்டாமுத்தூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திரைப்பட நடிகை விந்தியா, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
``தமிழகத்தில் ஊழலுக்காகவேஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். 32 ஆண்டுகளாக கட்டிக்காத்து எழுப்பப்பட்டது அ.தி.மு.க. என்ற கோட்டை. இந்தக் கோட்டையில் நாங்கள் இருக்கும்வரை ஒரு செல்களைக்கூட பிரிக்கமுடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறக்கும் தருவாயிலும்கூட அ.தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினாரே தவிர தனக்குப் பின்னால் இந்தக் கட்சியையும், மக்களையும் யார் பார்த்துக் கொள்வார்கள் என எண்ணியதில்லை. அந்தப் பணியைத்தான் நாங்கள் இன்று செய்து வருகின்றோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் சிம்மாசனத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கிறார். யாராவது துண்டுச் சீட்டு எழுதிக் கொடுத்தால் அதை அப்படியே படித்துவிட்டுப் போகிறார். அவர் சுயமாக எதையும் பேசவில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.

தொண்டாமுத்தூர் பகுதியில் வந்து புதிதாக ஒன்றை கொளுத்திப் போட்டுள்ளார். அவர் கொளுத்திப்போட்ட அனைத்தும் மக்களிடம் சென்றடையவில்லை என்பதை இந்தக் கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது. மக்களுக்குத் தெரியும், கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி இந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளோம். மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கோவை மாவட்டத்தில் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார் என எதாவது ஒன்றை சொல்லச் சொல்லுங்கள். ஆனால் எங்கள் ஆட்சியில் தொண்டாமுத்தூர் மட்டுமன்றி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தியிருக்கிறோம். நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி மக்களிடத்தில் சென்று வாக்கு சேகரிப்போம். எங்களுக்கு அந்த உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.