கோவை: வன எல்லையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: வன எல்லையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை அருகே வன எல்லையை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில், சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போத்தமடை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் இரட்டைமடை பகுதியைச் சேர்ந்த ஷாஜு என்பவரது தோட்டத்தை, செமனாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் கார்த்திகேயன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதும், அவர் சட்டவிரோதமாக அங்கு வன எல்லையைச் சுற்றியும் மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளை, அப்புறப்படுத்திய வனத்துறை அதிகாரிகள், தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து ரூ.50,000 அபராதம் தொகை வசூலித்தனர்.