கோவை: ஊரடங்கால் வேலை இழந்த வாலிபர் கடனாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு டியூ கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை: ஊரடங்கால் வேலை இழந்த வாலிபர் கடனாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு டியூ கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முருகா நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் லட்சுமணன் (வயது 27). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு லேத் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார். பின்னர் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் லட்சுமணன் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் மோட்டார் சைக்கிளுக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
கடனை அடைப்பதற்காக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக லட்சுமணன் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டார். மேலும் ஆசை ஆசையாக வாங்கிய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விடுவார்களோ என்ற அச்சமும் அவருக்கு அதிகரித்தது. வீட்டில் தனியாக இருந்தஅவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.