கோவை: தரமற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஊழல் முறைகேடுகளை கண்டித்து வரும் 31ம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார்.
கோவை: தரமற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஊழல் முறைகேடுகளை கண்டித்து வரும் 31ம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார்.
கோவை காந்திபுரம் திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும் பழைய பொருட்களை வாங்கி அதற்கு வண்ணம் அடித்து புதியதைப் போல பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக நீர்நிலைகளின் அளவுகள் குறைக்கப்பட்டு நீர்நிலைகளின் நடுவே சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது எனவும் இந்த பணிகள் ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றார்.
பந்தய சாலை பகுதி பசுமை பகுதியாக இருக்க வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி சார்பில் தீர்மானம் போடப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு வணிக நிறுவனங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில் குளக்கரைகளிலும், பந்தய சாலை பகுதிகளிலும் உணவு விடுதிகள் அமைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
ரூ.1000 கோடி அளவில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், தரமற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்டித்தும், ஊழல் முறைகேடுகளை கண்டித்து வரும் 31ம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தெரிவித்தார்.
அதிமுகவினர் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொங்கல் டோக்கன் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.
கோவையில் அம்மா கிளினிக் திறக்கும் போது அதிமுக சார்பில் சாலைகளில் பெரிய அளவிலான கட் அவுட்கள் வைக்கப்படுகின்றது. அவ்வாறு வைக்கப்படும் கட் அவுட்டுகள் மீது கோவை மாநகர போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், கோவையில் திமுகவினர் நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கோவை மாநகர காவல்துறை செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் கிராம சபைகளை காவல் துறை தொடர்ந்து தடுக்கும் பட்சத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தெரிவித்தார்.