கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் துறையினருடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் வரும் ஜனவரி 10ம் தேதி கலந்துரையாடுகிறார்.
கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் துறையினருடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் வரும் ஜனவரி 10ம் தேதி கலந்துரையாடுகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தை துவங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்.
இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 10ம் தேதி இந்நிகழ்ச்சியை நடத்த மக்கள் நீதி மையம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.
இது குறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:
கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிய மக்கள் நீதி மய்யம் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தொழில் துறையினருக்கு பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு என பிரத்யேக தொழிற்பேட்டை அமைத்தல், பாழடைந்த நிலையில் காணப்படும் பம்ப்செட் தர மதிப்பீடு சோதனை மையத்தை புனரமைத்தல், மாதந்தோறும் தொழில் துறையினருடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துதல், நலிவடைந்த நிலையில் உள்ள குறுந்தொழில் பம்ப்செட் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் நல வாரியம் அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன.
மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நடத்த முன்வந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.