கோவை: கோவை மாநகராட்சியில் கழிவுகளை சேகரிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் கழிவுகளை சேகரிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்காக மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் 18 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டன. அவற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.95 லட்சம் மதிப்பீட்டில் 13 மக்கும் கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களும், தூய்மை இந்தியா திட்டத்தில் 35.75 லட்சம் மதிப்பீட்டில் 5 மக்காத கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களும் வாங்கப்பட்டன.
இந்த வாகனங்களை குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பயன்பாட்டுக்கு அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் சாலையோர கட்டிடக் கழிவுகளை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக கனரக வாகனத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.