கோவை: வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் 4.5 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் 4.5 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் தமிழ்நாடு, தலைவர் எம்.ஆர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி முதல் காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட உள்ளோம். எங்களது இந்த போராட்டம் நடக்க பல காரணங்கள் உண்டு. அனைத்து லாரிகளுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொறுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்ற 49 நிறுவனங்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசு இந்தக் கருவிகளை குறிப்பிட்ட 12 நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதுகுறித்து எங்களது சம்மேளனம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில் மத்திய அரசு அனுமதி அளித்த நிறுவனங்களில் எங்கு வேண்டுமானாலும் இந்தக் கருவிகளை பெற்றுக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே ஒளிரும் பட்டை ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என அரசு கூறுகிறது. ரூ. 600க்கு வாங்கும் ஒளிரும் பட்டைகளுக்கு அந்த நிறுவனங்களில் ரூ.5000 வரை செலவாகிறது. எனவே, அனைத்து நிறுவனங்களிலும் ஒளிரும் பட்டைகள் வாங்க அனுமதிக்க வேண்டும்.
ஜி.பி. எஸ். கருவிகள் வாங்க 140 கம்பெனிகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட 8 கம்பெனிகள் வாங்க அரசு கூறுகிறது. ரூ.3 ஆயிரம் விலை உள்ள கருவிகளுக்கு அந்தக் கம்பெனிகளில் ரூ. 15 ஆயிரம் ஆகிறது. அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக நாடு முழுவதும் ஒரே விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. சமீபத்தில் சோதனைச் சாவடியில் ஆர்.டி.ஓ சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நன்றி.
பிற மாநிலங்களில் பார்டர் செக் போஸ்ட்டுகளை அகற்றிவிட்டனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் உள்ளது. அந்த செக் போஸ்ட்டுகளில் வசூல் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல் பங்க்குகளில் நிற்கும் லாரிகளுக்குக்கூட அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை காவல்துறையினர் முறைப்படுத்த வேண்டும். மேலும் டீசல் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி காலை 6 மணி முதல் 4.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் இந்திய மோட்டார் காங்கிரஸ் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே 27ம் தேதி வெளிமாநில லாரி வாகனங்களும் வராது. இங்கிருந்தும் லாரிகள் செல்லாது. இதனால் 5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும். லாரிகள் அல்லாமல் சிறிய ரக வாகனங்கள் வைத்திருப்போரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.