கோவை: சமஸ்கிருதச் செய்தித் தொகுப்பை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து கோவை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: சமஸ்கிருதச் செய்தித் தொகுப்பை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து கோவை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாள்தோறும் சமஸ்கிருதச் செய்தித் தொகுப்பை தமிழ்நாட்டில் பொதிகை தொலைக்காட்சியிலும், பிறமாநிலத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டல தொலைக்காட்சி அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், இது மத்திய அரசின் சமஸ்கிருத மொழி திணிப்பு என்று குற்றம் சாட்டியுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள பொதிகை தொலைக்காட்சி நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில், தொலைகாட்சி நிலையம் முன்பு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரப்ப்பான சூழல் நிலவியது.

இதனைத்தொடர்ந்து த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வழக்கொழிந்த வடமொழியான சமஸ்கிருத மொழியில் பொதிகை தொலைக்காட்சியில் செய்தியாக வாசிக்க உத்தரவிட்டு, கடந்த 1ம் தேதி முதல் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் 15 ஆயிரம் பேர் கூட பேசாத மொழிக்காக ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது, பா.ஜ.க அரசு. சமஸ்கிருத திணிப்பின் மூலம் இந்தியா ஆரிய பண்பாடு நிறைந்த நாடு என்பதை காட்ட மத்திய அரசு முயற்சிக்கிறது.
ஏற்கனவே, மாநில மொழிகள் அழியும் நிலையில் உள்ள சூழலில், அதற்கு ரூ.10 கோடி மட்டும் நிதி ஒதுக்கிவிட்டு, சமஸ்கிருதத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கி செலவு செய்வது மக்கள் பணத்தை வீணடிக்கின்ற செயல். மாநில மொழி உரிமைகளை பறிக்கும் செயல். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பொதிகை தொலைக்காட்சி நிலையத்தை முற்றுகையிட முயன்ற 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.