கோவை: கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள தமிழக வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்துள்ள வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு சுமார் ஒரு வருடம் ஆகியும் இன்று வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படாதது ஏன் என நா.கார்த்திக் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள தமிழக வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்துள்ள வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு சுமார் ஒரு வருடம் ஆகியும் இன்று வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படாதது ஏன் என நா.கார்த்திக் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
கடந்த பல வருடங்களாக இந்த பாழடைந்த வீடுகளை இடித்து புதிய வீடுகளாக கட்டி, அதே மக்களுக்கு ஒப்படைப்பதற்கு முனைப்பு காட்டாமல் தாமதப்படுத்திக் கொண்டு இருப்பதோடு, திமுக மற்றும் பொதுமக்களின் ஒட்டு மொத்த போராட்டத்தை உதாசீனப்படுத்தி, இந்த குடியிருப்பில் வசிக்கும் மக்களைப் பற்றி கவலைப்படாமல், மக்களைக் காக்கும் தனது கடமையிலிருந்து நழுவி, பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்த்துக் கொண்டு, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கையாலாகாத, நிர்வாகத் திறனற்ற இந்த அடிமை அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவது வெட்கக்கேடாக இருக்கிறது.
கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் தொகுதி, 64வது வட்டம், உழவர் சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55 ஏக்கர் பரப்பளவில் , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு , மக்கள் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள்.
ஆனால், இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, பாழடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதற்கு அதிமுக அரசின் தரமில்லாத கட்டுமானப் பணிகள்தான் காரணம். இதற்கு இந்த அரசுதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இதனால் இந்த குடியிருப்பில் உள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, இனி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து, கடந்த 2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு ஆகிய 2 வருடங்களிலும் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிதி நிலைக் கூட்டத் தொடரிலும், கேள்வி நேரத்திலும் , கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தும் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்ற நிதி நிலைக் கூட்டத் தொடரிலும், இந்த வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையிலும், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையிலும் உள்ளது என்றும் இந்த மக்கள் தங்குவதற்கு தமிழக அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்து அந்த மக்கள் வாழ்வதற்குண்டான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேசினேன்.
அதற்கு பதிலளித்து பேசிய துணை முதல் அமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் “வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகளை ஒப்படைத்த பின் பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்வதற்கு விதிமுறைகளின்படி இடமில்லை” என்று பதிலளித்தார். பின்னர் அடுத்த கேள்வியாக “இந்த குடியிருப்பில் உள்ளவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்ள அரசு மானிய உதவியுடன் கடன் உதவி செய்யுமா” என்று நான் கேள்வி எழுப்பியதற்கு , அதற்கும் “அரசின் விதிமுறைகளின் படி இடமில்லை” என்று துணை முதலமைச்சர் பதிலளித்தார்.
இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் , கடந்த 04.12.2019 அன்றும் இந்த குடியிருப்புகள் சிதிலமடைந்து, பாழடைந்து உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த குடியிருப்புகள், இடிந்து பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த மக்களுக்கு அதே பகுதியில் மாற்று இடங்களில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து தங்குவதற்குண்டான ஏற்பாடுகளையும், இது மட்டுமின்றி பழைய சிதிலமடைந்துள்ள வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தரமான வீடுகள் கட்டி அதே மக்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.
கடந்த 13.12.2019 அன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆயிரக்கணக்கான பொதுமக்களைத் திரட்டி, திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக , நான்கு ஆண்டுகளாக நான் இது குறித்து பேசியும், போராடியும் வலியுறுத்தியும் வருகிறேன்.
கடந்த 13.12.2019 அன்று திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் காரணத்தால் , 15.12.2019 அன்று, கோவையில் துணை முதல் அமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் , இந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, பழைய வீடுகளை ஒப்படைக்காத மக்கள் விரைவில் வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து விட்டு வீடுகளை காலி செய்தால், வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று தனது பேட்டியில் கூறினார்.
ஆனால், வீட்டு வசதித் துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு சுமார் ஒரு வருடம் ஆகியும் , இங்குள்ள பொதுமக்கள் ஒப்புதல் கடிதங்கள் கொடுத்தும், இன்று வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இந்த அரசு முற்றிலும் செயலிழந்து, முடங்கிக் கிடக்கிறது என்பதற்கு இது, மேலும் ஒரு உதாரணமாக உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தங்களது உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள குரல் கொடுத்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே , பாதிக்கப்பட்ட இந்த ஹவுசிங் யூனிட், தமிழக வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மதித்து, கேள்விக்குறியாக உள்ள இந்த பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துப் பாதுகாக்க, காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும். அதுவரை, அதே இடத்தில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு , தற்காலிக வீடுகள் அமைத்துத் தர வேண்டுமென்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வலியுறுத்துகிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.