கோவை: கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்ச்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: 40 சதவீதம் போனஸ், ரூ.10 ஆயிரம் முன்பணம், வேலை நேரம் மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அனைத்து டாஸ்மாக் ஊழியர் தொழிற் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் சங்கத்தின் கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, இந்த கோரிக்கைகளை உடனடியாக டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டாஸ்மாக் அனைத்து கூட்டுக்குழு சங்கத்தின் தலைவர் மூர்த்தி கூறுகையில், தமிழக அரசு தொழிற்சங்ககளுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக பத்து சதவீத போனஸ் அறிவித்து உள்ளது. இதனை ஏற்கமாட்டோம் எனவும் நாற்பது சதவீத போனஸ் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை முன்பணம் வழங்கிட வேண்டும் என்றார்.
இந்த பண்டிகை கால முன்பணத்தை மாதம் ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளலாம் என கூறிய அவர், கொரோனா தொற்று காலத்திலும் டாஸ்மாக் ஊழியர்கள் முழுமையாக பணியாற்றி அரசிற்கு வருமானம் ஈட்டி கொடுத்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சிறு சிறு பிரச்சனைகள் டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். டாஸ்மாக் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளமே 15,000 எனவும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை என்றார். மேலும், டாஸ்மாக் நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.