நீலகிரி: சிறை அதிகாரிகள் முறையாக உணவு வழங்காமல் இருட்டு அறையில் அடைத்து தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாக கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி அருணாசலத்திடம் புகார் மனு அளித்தனர்.
நீலகிரி: சிறை அதிகாரிகள் முறையாக உணவு வழங்காமல் இருட்டு அறையில் அடைத்து தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாக கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி அருணாசலத்திடம் புகார் மனு அளித்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு தேயிலை எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான் மற்றும் மனோஜ் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஜாமீனில் வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நாளில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் சயான் தனது மனைவி குழந்தையுடன் கேரளாவிற்கு சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சயான் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும், கோடநாடு கணினி பொறியாளர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோடநாடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, வாக்குமூலம் அளித்த சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி கோடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக கூறியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.
இந்நிலையில், தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை கடந்த 28 ஆம் தேதி முதல் சிறை அதிகாரிகள் உணவு வழங்காமல், இருட்டறையில் அடைத்து தங்களை பல்வேறு வகையில் துன்பம் கொடுத்து வருவதாகவும், தங்களுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதால் சிறையில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி அருணாச்சலத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சயான் மற்றும் மனோஜ் அவர்களின் வழக்கறிஞர் ஆனந்திடம் கூறுகையில், சிறை அதிகாரிகளிடம் தங்களை இருட்டு அறையில் ஏன் அடைத்து வைத்து தங்களுக்கு உணவுகூட அளிக்காமல் கொடுமை செய்கிறீர்கள் என கேட்டதற்கு இது அனைத்தும் மேலிடத்து உத்தரவு என ஒரே வார்த்தையில் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் அவர்களின் வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.