கோவை: கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உருவப் படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்தி பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உருவப் படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்தி பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை இழிவாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் ஆகியோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, திருமாவளவன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், திருமாவளவன் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, இந்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது தவறு எனவும் தொடர்ந்து இந்து மதத்தை திருமாவளவன் இழிவுபடுத்தி வருவதாக தெரிவித்தார்.
எந்த விதமான இந்து தர்ம நூலிலும் திருமாவளவன் சொன்ன கருத்துகள் சொல்லப்படவில்லை எனவும் ஆங்கிலேயர்கள் மதமாற்றம் செய்ய எழுதிய நூலில் இருப்பதை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் எனவும் கூறிய அவர், இதை இந்து தர்மம் ஏற்கவில்லை எனத் தெரிவித்தார்.
அதேபோல, 2016க்கு பிறகு பாஜக மிகப்பெரிய சக்தியாக வருவதை விரும்பாமல் குறி வைத்து பாஜக மீது தாக்குதல் நடத்துகின்றனர் எனவும், 2021 தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழக பெண்களின் கோபத்தை பாஜக பிரதிபலிப்பதாகவும் குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்தார். தேர்தலுக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் தொடர்பில்லை எனவும் மனு ஸ்மிருதி விவதாம் செய்யும் விஷயம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகமாக்கியுள்ளது எனவும் திருமாவளவனை எம்.பி என பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.