கோவை: கோவையில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தவேல். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 14 வயது மகன் அருண் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
செல்போனில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் எந்த நேரமும் விளையாடியபடியே இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் சிறுவன் கேட்காததை அடுத்து, பப்ஜி விளையாட்டிலிருந்து மீட்க, அவரது பெற்றோர் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பகுதியில் உள்ள நண்பரின் தோட்டத்தில் தங்கி சிறுவனுக்கு சூலூரில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் அருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பின்னர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.