கோவை: திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கிய நிர்வாகிகளை கேலியாக சித்தரித்து போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடைபெறும், என கோவையில் திமுக இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.
கோவை: திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கிய நிர்வாகிகளை கேலியாக சித்தரித்து போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடைபெறும், என கோவையில் திமுக இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.

சமீபத்தில், கோவையில் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட முக்கிய நிர்வாகிகளை கேலியாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்களை கிழித்த திமுகவினர் 12 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்த காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், திமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதிமுக ஆட்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் எஸ் பி வேலுமணி கண்டித்து கோவையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை போலீசார் திடீரென அனுமதி மறுத்து மேடையை அகற்ற முற்பட்டதால், திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினரை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர், நா காரத்திக் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மேடையை விட்டு இறங்க மறுத்து, காவல் துறையினருக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர், காவல் துறையினர் அனுமதி அளித்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடைக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்தவுடன் காவல் துறையினருக்கு எதிராகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதனையடுத்து, கூட்டத்தினர் மத்தியில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இது வெறும் போஸ்டர் ஒட்டியதற்கான போராட்டம் கிடையாது. கோவையில் அமைச்சர் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது, அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கின்றார். தேர்தலில் மக்கள் அவருக்கு துரத்தி துரத்தி சாவு மணி அடிக்க போகின்றனர்", என தெரிவித்தார்.
மேலும், பெயரைப் போட்டுக் கூட போஸ்டர் அடிக்க தைரியமில்லாதவர் அமைச்சர் வேலுமணி என கூறிய உதயநிதி ஸ்டாலின், இதை விட சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர் அடிக்க தெரியும், என்றார். அடுத்த முறை போஸ்டர்கள் ஒட்டினால் கிழிக்க மாட்டோம், எனவும் அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம், எனவும், தெரிவித்தார்.
அதேபோல, குனியமுத்தூர் பகுதியில் போராட்டம் நடத்த திட்டமிட்டபோது, அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில், இன்று காலை திடீரென அனுமதி மறுத்துள்ளனர், என்று குற்றம் சாட்டினார்.
கைது செய்வதற்கு எல்லாம் பயந்த இயக்கம் திமுக அல்ல, கைது செய்யப்படலாம் என தெரிந்து தயாராகவே, மேடைக்கு வந்தேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
போஸ்டரை கிழித்த திமுகவினர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவர்களை விடுவிக்க காலதாமதம் செய்து வந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டலினே கோவைக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து போவதாக தெரிவித்ததால், காவல் துறையினர் கைது செய்த திமுகவினரை உடனடியாக விடுவித்ததாக கூறினார்.
மேலும், டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை பிடித்தவர், எடப்பாடி பழனிச்சாமி எனவும் இப்போது யார் முதல்வர் என்பதே தெரியவில்லை எனவும் கூறிய அவர், நிழல் முதல்வராக எஸ்.பி.வேலுமணி இருக்கின்றார். தற்போது, தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது, என்று சாடினார்.
கொரொனாவை வென்றெடுத்த நாயகனே என்று கோவையில் எஸ்.பி.வேலுமணி நோட்டீஸ் ஓட்டிய பின்னரே, கோவையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்ததாகவும் தற்போது நடைபெறும் ஆட்சி கொரோனாவை விட மோசமான ஆட்சி எனவும் கடுமையாக, உதயநிதி விமர்சனம் செய்தார்.
பின்னர், அமைச்சர் வேலுமணி ஊழல் மணி என தெரிவித்த அவர், பிளிச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது எனவும் கோவையில் கே.சி.பி, ஆலயம் அறக்கட்டளை என 7 நிறுவனங்கள் வைத்து அதனை மாற்றி மாற்றி டெண்டர் எடுத்து கொள்ளையடித்து இருக்கின்றனர் எனவும் 1300 மதிப்பு எல்.ஈ.டி பல்பை 6000 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்கள், எனவும் குற்றம்சாட்டினார்.
ஊழல் செய்தற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது எனவும் ஆட்சி மாறியவுடன் ஊழல் செய்தவர்கள் அனைவரும் உள்ளே போக போகின்றனர், எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வை இங்கே அனுமதித்தது எடப்பாடி அரசு எனவும், வெறும் 8 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் மருத்துவராக முடியும் நிலை இருப்பதாக கூறிய அவர், சசிகலா காலில் விழுந்ததை போல முதல்வர் ராஜ்பவனுக்கு தவழ்ந்து போய் மண்டியிட்டாவது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி வாங்கி கொடுங்கள், எனவும் நையாண்டியாக தெரிவித்தார்.

மேலும், கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட முக்கிய நிர்வாகிகளை கேலியாக சித்தரித்து பல்வேறு இடங்களில் போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அடுத்த முறை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும், எனவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.