கோவை: கோவையில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
கோவை: கோவையில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வியை துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்பது பொது மக்களின் நம்பிக்கை. இதனையொட்டி, கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
காலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கோவிலில் வழிபட்ட பின்னர் அரிசியில் "ஓம்" மற்றும் "அ" போன்ற எழுத்துக்களை எழுதியும் தங்களது குழந்தைகளின் கல்வியை தொடங்கினர்.
இன்றைய தினத்தில் கல்வியை துவங்கினால் சிறப்பு என்பதால் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கல்வியை துவங்கியிருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். வழக்கமாக வித்யாரம்பம் நடக்கும் போது குழந்தைகளின் நாவில் தேன் தொட்டு தங்க ஊசியால் "ஓம்" மற்றும் "அ" போன்ற எழுத்துகள் எழுதப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த முறை "எழுத்தாணிப்பால்" எனப்படும் தங்க ஊசி கொண்டு நாவில் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், கூட்டமாக பொது மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் வரிசையாக நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறத்தபட்டு இருந்தது. அவற்றை அணிந்து வந்த பெற்றோர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். எழுத்தாணிப்பால் எனப்படும் நாக்கில் தங்க ஊசியால் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சிறிது வருத்தம் அளித்தாலும், கொரோனா நோய் தொற்று காலத்தில் விஜயதசமிக்காக கோயில்களில் இப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளும், மக்கள் அனுமதிக்கப்பட்டதுமே மகிழ்ச்சியாக இருப்பதாக கோவிலுக்கு வந்த பெற்றோர் தெரிவித்தனர்.