கோவை: கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திட மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள கட்டடங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதில், 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன, என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திட மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள கட்டடங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதில், 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன, என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கோவை உக்கடம் அருகே செட்டி வீதியில் கடந்த 6ம் தேதி மழை காரணமாக 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். இச்சம்பவம், கோவை மாவட்ட மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் மிகவும் பழுதடைந்துள்ள நீண்ட காலமாக பயன்படுத்தாமல் ஆபத்து விளைவிக்கக் கூடிய அரசு மற்றும் தனியார் கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ஆட்சியர் உத்திரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பழுதடைந்து விழும் நிலையில் கட்டிடங்கள் உள்ளதா? என்பதை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவ மழை காலம் நெருங்குவதால், மாவட்டத்தில் உள்ள பழுதடைந்துள்ள கட்டிடங்களை கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி, கோவை மாவட்டத்தில் 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளன. அதில், 13 கட்டிடங்கள் வரை இடித்து அகற்றப்பட்டுள்ளது,’’ என்றார்.