கோவை: பொள்ளாச்சி ரிசார்ட் உரிமையாளர் மோசடி வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட அனுப்குமாரை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி ரிசார்ட் உரிமையாளர் மோசடி வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட அனுப்குமாரை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த தனியார் ரிசார்ட் உரிமையாளர் முத்து என்பவரிடமிருந்து, ரூ.1.72 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில், செப்டம்பர் 15ம் தேதி மோசடி கும்பலை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 5 பேரை, செமனாம்பதி பகுதியில் வைத்து ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அனுப்குமார், செப்டம்பர் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் பணம், நான்கு சொகுசு கார்கள், 50 சவரன் தங்க நகை, 2 நாட்டு துப்பாக்கிகள், 5 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, அனுப்புகுமாரை காவலில் எடுப்பது தொடர்பாக ஆனைமலை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் ஒருநாள் காவல் எடுக்க அனுமதி அளித்ததன் பேரில், நேற்று இரவு உடுமலை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அனுப்குமாரிடம் ஆனைமலை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மோசடி கும்பலுக்கு துப்பாக்கி விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த நபர் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், அனுப்குமாரிடமிருந்து, மேலும் ஒரு (ஏர் கன்) துப்பாக்கி, ரூ.1 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்புள்ள சோபா மற்றும் படுக்கை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட, 50 சவரன் நகை மற்றும் சொகுசு கார்கள் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று மாலை விசாரணை காலம் முடிந்ததை அடுத்து, அனுப்குமாரை மீண்டும் பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி, அவரை அவிநாசி சிறைக்கு, ஆனைமலை போலீசார் கொண்டு சென்றனர்.