கோவை: கோவை வடவள்ளி பகுதியில் உள்ள மைக்ரோபயாலஜி என்ற தனியார் பரிசோதனை நிலையத்தில், கொரோனா இல்லாதவருக்கு கொரோனா இருப்பதாக கூறி சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள், அவரது நண்பர்கள் அந்த பரிசோதனை நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை வடவள்ளி பகுதியில் உள்ள மைக்ரோபயாலஜி என்ற தனியார் பரிசோதனை நிலையத்தில், கொரோனா இல்லாதவருக்கு கொரோனா இருப்பதாக கூறி சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள், அவரது நண்பர்கள் அந்த பரிசோதனை நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் உள்ள மைக்ரோபயாலஜி என்ற நுண்கிருமி பரிசோதனை செய்யும் நிலையம் செயல்பட்டு வருகிறது, இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையம். இதனிடையே, கோவை கோவில்மேட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (27), இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கட்டிட கம்பனியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது கம்பெனி சார்பாக, இவர் மற்றும் மற்றொரு ஊழியருக்கு, கொரோனா பரிசோதனை செய்ய, வடவள்ளி மைக்ரோபயாலஜி பரிசோதனை நிலையத்தில் நேற்று காலை சளி மாதிரிகளை கொடுத்துள்ளனர்.

"நேற்று மாலை, அந்த பரிசோதனை நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில், எனக்கு கொரோனா பாஸிட்டிவ் என்றும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமென்று தெரிவித்தனர். முதலில், அதிர்ச்சியாக இருந்தாலும், எனக்கு ஒரு சிறு உடல்வலி கூட இல்லாதது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது", என்றார் மணிகண்டன்.
பின், அன்று இரவே மணிகண்டன், கோவை அவிநாசி சாலையில் உள்ள வேறு ஒரு தனியார் பரிசோதனை நிலையத்தில், மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இரண்டாம் தடவை எடுத்த முடிவுகள் காலை அவருக்கு வந்துள்ளது, அதில் கொரோனா நெகடிவ் என்று வந்ததால், நிம்மதி அடைந்த மணிகண்டன், மைக்ரோபயாலஜி பரிசோதனை மையத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.

அப்போது அந்த பரிசோதனை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நாங்கள் அளித்த முடிவு தான் சரி என்று விவாதத்தில் ஈடுபட்டதாக மணிகண்டன், தெரிவித்தார்.
இது குறித்து, மணிகண்டன் மேலும் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 3-4 பேருக்கு இதே போன்று தான் நடந்தது. முதலில் இங்கு பரிசோதனை செய்த போது, கொரோனா பாஸிட்டிவ் என்றும், பின் வேறு இடத்தில், அதே நாளில் பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று இல்லை, என்றும் வந்துள்ளது. சென்ற மாதம் 29 ஆம் தேதி, என்னுடன் பணிபுரியும் சக ஊழியருக்கு பாஸிட்டிவ் என்று மைக்ரோபயாலஜி நிலையம் அறிக்கை கொடுத்தது. அதன்படி அவர், 400 கொரோனா பாதித்தவர்களுடன் 3-4 மணி நேரம் இருந்துள்ளார். அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாததால், அவர் எதற்கும் வெரு இடத்தில் பரிசோதனை செய்துள்ளார்.
பரிசோதனை முடிவு, நெகடிவ் என்று வந்துள்ளது. அதான் பின், அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டார்", என்றார் மணிகண்டன்.
தவறான முடிவுகள் கொடுப்பதால், மக்கள் பெரும் சிரமம் மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதாக, அவர் தெரிவித்தார்.
இந்த பரிசோதனை முடிவினால், மிகுந்த மன உளைச்சலுக்கு, ஆளான மணிகண்டன், அவரது நண்பர்களுடன் இன்று காலை, வடவள்ளி பகுதியில் உள்ள மைக்ரோபயாலஜி பரிசோதனை நிலையத்தை முற்றுகையிட்டடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அங்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் பாதிக்கபட்டவரின் உறவினர் மற்றும் பரிசோதனை நிலைய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் பரிசோதனை நிலையத்தை தற்காலிகமாக பூட்டினர். மேலும், பரிசோதனை நிலைய ஊழியர்களிடம் விசாரனை நடத்தினர்.
இது குறித்து, மருதமலை ரோடு, நவாவூர் பிரிவு காவல் நிலையத்தில், அவர் மற்றும் பாதிக்கப்பட்ட மற்றொருவர் புகார் கொடுத்துள்ளதாக, தெரிவித்தார்.

இன்று மதியம், அந்த பரிசோதனை நிலையம், தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், தற்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாகவும், மணிகண்டன் தெரிவித்தார்.
இது குறித்து, மைக்ரோபயாலஜி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, புகார் குறித்து அவர்களுக்கு ஏதும் தெரியாது என்று தெரிவித்து தொலைபேசி அழைப்பை துண்டித்தனர்.