திருப்பூர்: திருப்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை இன்று காலை 7 மணி அளவில், நல்லூர் காவல் நிலைய போலீசார் சரண்யா என்ற பெண் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மணிகண்டன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மணிகண்டன் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணிகண்டன் ஆரோக்கியமுடன் போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் உயிரிழந்ததாக தெரிவித்த சம்பவம் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மணிகண்டனின் உறவினர்கள் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது மணிகண்டன் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறினர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்திருந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வாகனத்தை முற்றுகையிட்ட மணிகண்டனின் உறவினர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறிய அவர், உடற்கூறு ஆய்வு சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.