காந்திபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான காந்திபுரம் 5 முதல் 9 வது வீதி, நேரு வீதி, லஜபதிராய் வீதி, விவேகானந்த வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நிலத்தடியில் மின்சாரக் கம்பி புதைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வரை மிக மந்தமான நிலையிலும், பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை சீரமைக்கப்படாமலும் மேற்கண்ட பகுதிகளில் மிகமோசமான நிலையில் சாலைகள் காணப்படுகின்றன.
நகரத்தின் முக்கிய பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் காந்திபுரத்திற்கு நாள்தோரும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குண்டும், குழியுமான இச்சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.