கோவை: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் அறிக்கை லட்சுமண ரேகையை தாண்டும் வகையில் உள்ளது எனவும் நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர், நடிகர் சூரியா நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
கோவை: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் அறிக்கை லட்சுமண ரேகையை தாண்டும் வகையில் உள்ளது எனவும் நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர், நடிகர் சூரியா நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் 70 ஆவது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை மரகன்று நட்டு வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் எனவும் கோவையில் ஐந்து மண்டலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பாஜகவினர் மட்டுமில்லாமல் தமிழக மக்களும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடி வருவதை காணமுடிகிறது, இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.
மும்மொழி கொள்கை
தமிழ்நாட்டில், அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது எனவும் மும்மொழி கல்வி கொள்கையில் கூட்டணிக்குள் முரண்பாடுகள் இருப்பது சகஜமானது, என அவர் கூறினார். மும்மொழி கொள்கை விவகாரத்தில், பாஜக தெளிவாக உள்ளது எனவும் புதிய கல்வி கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்க ஆரம்பித்துள்ளனர், எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், இரு மொழிக் கொள்கை தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது, அவரது கருத்து எனவும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில், தமிழக மக்கள் மும்மொழி கொள்கை வேண்டுமென நினைக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் மூன்று மொழி படிப்பதால் அறிவுத்திறன் அதிகரிக்கும், எனவும் இந்தி மொழி குறித்த விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது, எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு அச்சம்
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துர்திஷ்டவசமானது எனவும் நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டதாக கூறிய, அண்ணாமலை, நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் அரசியலாக்குவதாக வருத்தம் தெரிவித்தார்.
நடிகர் சூர்யாவின் நீட் அறிக்கை
நடிகர் சூர்யா நல்ல மனிதர், நல்ல நடிகர். சூரியாவின் நீட் தேர்வு குறித்த அறிக்கை லட்சுமண ரேகையை தாண்டும் வகையில் இருப்பதாகவும், அவரது கேள்விக்கான விடையை 2020 நீட் ரிசல்ட் தரும் என கூறினார்.
நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர் நடிகர் சூரியா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்பிற்கு உரியது என்றார்.
இன்று பெரியாரின் பிறந்தநாள் மற்றும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் குறித்து சமூக வலயதலங்களில் பகிரப்படும் மீம்ஸ் மற்றும் பதிவுகள் குறித்து கேட்க போது, சமூக வலைதளங்களில் அநாகரீகமாக விமர்சனங்கள் மற்றும் தேவையற்ற ஹாஷ் டேக் (Hash tag) தவிர்க்கபட வேண்டும், என அவர் கருத்து தெரிவித்தார்.
பெரியார் குறித்து கருத்து தெரிவிக்கையில், பெரியார் தவிர்க்க முடியாத தலைவர்.
ஆனால், அவரது பல கொள்கைகளை நாங்கள் ஏற்க மாட்டோம். மக்களுக்காக பாடுபட்ட பெரியாரின் சில கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறோம், என்றார்.