கோவையில் இன்று முதல் பஸ் போக்குவரத்து துவங்கியது; மாஸ்க்' அணிந்த பயணிகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவு.
கோவை: கோவை கோட்டத்தில் இன்று முதல் 1326 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஜூன், 30ம் தேதி வரை பல தளர்வுகளுடன், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக, இன்று முதல், 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகின்றன. எட்டு மண்டலங்களாக, பஸ் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மண்டலங்களுக்கு இடையே, பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள், ஒன்றாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவையில், 539 பஸ்கள், திருப்பூரில், 280, ஈரோட்டில், 334, நீலகிரியில், 173, என 1,326 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
'மாஸ்க்' அணிந்த பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளி அவசியம் என்பன உள்ளிட்ட, அரசின் வழிகாட்டு நடைமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர், அன்பு ஆபிரகாம் கூறியதாவது:
கோவையில் 31 பயணிகளுடன் வெளியூர் பஸ்களும், 22 பயணிகளுடன் உள்ளூர் பஸ்களும் இயக்கப்படவுள்ளன. டிரைவர், கண்டக்டர்களுக்கு பரிசோதனை செய்வதுடன், மாஸ்க், கிளவுஸ் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுந்த இடைவெளியில் கிருமிநாசினி தெளிக்கவும், வெப்பநிலையை சோதனை செய்யவும், தனி நபர் நியமிக்கப்பட்டுள்ளார். பஸ் ஸ்டாண்ட்களிலும், ஸ்டாப்களிலும் பஸ்களின் உள்ளே, கிருமி நாசினி தெளிக்கப்படும்.
பஸ் டிப்போக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே, பஸ்கள் வெளியே வரும். இன்று பஸ்கள் இயக்கப்பட்ட பிறகு, பயணிகளுக்கு ஏற்ப பஸ்களை அதிகரிப்பது, குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, அவர் கூறினார்.