கோவை: இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் துவங்கியது.
கோவை: இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் துவங்கியது.
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவை இன்று துவங்கியது. கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை 65 பயணிகளுடன் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. அதனை தொடர்ந்து, 70 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் கோவை வந்தடைந்தது.
விமானத்தில் வந்த பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் விமான நிலைய வளாகத்துக்குள் முகாமிட்டு வரக்கூடிய பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். பயணிகள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களின் கைகளில் சீல் வைக்கப்படுகின்றது.
பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் முடிவு வரும் வரை தனிமைபடுத்தி கொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். விமானத்தில் வரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் அரசின் தனிமை படுத்தும் மையங்களில் தனிமை படுத்தப்படுகின்றனர்.
அதேபோல, ஓட்டல்களில் தங்க விரும்புவர்களை மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி இருக்கும் ஓட்டங்களில் தங்க அனுமதிக்கின்றனர். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் பாசிட்டிவ் என இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கும், நெகட்டிவ் என வந்தால் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதேபோன்று வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் கைகளில் சீல் வைத்து வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் குறித்த தகவல் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்த பயணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து இல்லாததால் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருந்ததாகவும் விமான போக்குவரத்து தற்போது துவங்கியதால் சொந்த ஊருக்கு திரும்பி இருப்பதாகவும் விமான பயணிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு இயக்க திட்டமிட்டு இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கும், பின் கோவையில் இருந்து அதே ஊர்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.