நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 50 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த காவலர்களுக்கு மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சிறப்பு மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர்.
நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 50 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த காவலர்களுக்கு மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சிறப்பு மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த இரு மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்வது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இந்தநிலையில், இந்த ஆண்டு உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல் துறையினர் பல்வேறு மன இறுக்கத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தலைமையில் காவல் துறையினருக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட ஒரு லட்சம் வண்ண மலர்களை காவல் துறையினர் கண்டு ரசித்தனர்.
தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த அனைவரையும் தோட்டக்கலைத்துறை, பூங்கா ஊழியர்கள் கைகளைத் தட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர். 150 ரகங்களில் பூத்துக்குலுங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்களை காவல் துறையினர் கண்டு ரசித்து சென்றனர்.
ஏற்கனவே சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் கண்டு ரசித்து சென்ற நிலையில் காவலர்களுக்கும் இது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.