கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கொட்டப்படும் மாம்பழ கழிவுகளை வனவிலங்குகள் ருசி பார்ப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கொட்டப்படும் மாம்பழ கழிவுகளை வனவிலங்குகள் ருசி பார்ப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இருவழித்தட சாலைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய நீலகிரி மலைத்தொடர் என்பதால் யானை, மான், சிறுத்தை, கழுதைப்புலி, குரங்குகள், செந்நாய் என ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.
இந்த சாலைகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்கு செல்லவும் அங்கிருந்து வரும் வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் முதல் கொண்டை ஊசி பகுதியில் மாம்பழ கழிவுகளை சாலையின் ஓரத்தில் சில மர்மநபர்கள் கொட்டி செல்வதால் அதனை அங்குள்ள வன விலங்குகள் அதனை எடுத்து உண்டு வருகின்றன. அழுகிய நிலையில் உள்ள மாம்பழங்களும் சீக்கிரமாக பழங்களை பழுக்க வைக்க சிலர் கற்கள் வைத்து பழுக்க வைத்து கெட்டு போன பழங்கள் என மாம்பழத்தின் கழிவுகளை எடுத்து வந்து வனப்பகுதியின் நடுவே சாலை ஓரத்தில் கொட்டி செல்கின்றன.
இதனை வனத்தில் வறட்சி ஏற்பட்டு உணவின்றி தவிக்கும் வனவிலங்குகளும் குரங்களும் எடுத்து ருசித்து உண்ணுகின்றன. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் இந்த கழிவுகள் சாலையின் ஓரத்தில் கொட்டி சிதறியுள்ளதால் அதனை எடுத்து உண்ண குரங்கள் சாலைகளின் ஓரங்களில் அங்கும் இங்கும் அலைவதால் அவை வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுகளை வனத்தில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்
இதுகுறித்து வனத்துறையிடம் கேட்டது, உணவு கழிவுகளை வனத்தில் கொட்டுவது சட்டவிரோதமானது எனவும் உரிய முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.