கோவை: வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பணையை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பணையை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகருக்கு அக்காமலை தடுப்பணையில் இருந்து குடி நீர் விநியோகிக்கப்படுகிறது. அக்காமலை புல்வெளியில் இருந்து ஊற்றின் மூலம் வரும் நீர் கருமலை தேயிலை தோட்டத்தில் தடுப்பணை மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம் இயற்கை உந்து சக்தி மூலம் வால்பாறை நகரில் உள்ள குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.
தற்போது வால்பாறை நகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை போக்கிட வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ் தடுப்பணையை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் ஒரு கட்டமாக, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சுல்தானா மற்றும் நகராட்சிகளின் மண்டல பொறியாளர் வெங்கடேஷ் ஆகியோர் அக்காமலை தடுப்பணையை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அக்காமலை தடுப்பணையின் நீர் தேக்க பகுதியை விரிவாக்குவது, அணையின் கரைகளை வலுவாக்குவது மேலும் குடிநீர் விநியோக குழாய்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில், நகராட்சி மண்டல இயக்குநர் திருப்பூர் சுல்தானா, மண்டல பொறியாளர் வெங்கடேஷ். நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், நகராட்சி பொறியாளர் சரவணபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.