கோவை: கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து அனைத்தும் இயக்க தமிழக அரசு தடை விதித்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆட்டோக்கள் இயங்காத காரணமாக இதை நம்பி வாழும் பெரும்பாலான குடும்பங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் வரும் 18ம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் கூறுகையில், ஆட்டோக்கள் இயக்க இதுவரை ஐந்து முறை மனு அளிக்கப்பட்டு உள்ளது எனவும் எங்களது கோரிக்கையை அரசு செவி சாய்க்க வேண்டும் என்றார்.
மேலும், இந்த தொழிலை நம்பி கோவை மாவட்டத்தில் 15,000 மேற்பட்டோர் உள்ளதாக தெரிவித்த அவர், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 300 பேருக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்க பெற்று உள்ளதாகவும் அதுவும் முழுமையாக கிடைக்க பெறவில்லை என்று கூறினார்.
எனவே, அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் எனவும் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மட்டுமே பேட்ஜ் வழங்கப்படுவதால் எழுபது சதவீத ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேட்ஜ் இல்லாத காரணத்தால் நலவாரியத்தில் உறுப்பினர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.