கோவை: கோவை பழங்குடி மாணவியின் மருத்துவ படிப்பிற்கு ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை: கோவை பழங்குடி மாணவியின் மருத்துவ படிப்பிற்கு ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகேயுள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் மலசர் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதியுறுவதை பற்றியும், சங்கவி என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை குறித்து செய்திகள் வெளியானது.
இதனையடுத்து, ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தினர் மாணவி சங்கவிக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையினை நேரில் வந்து வழங்கினர்.
மேலும், நீட் பயிற்சி மற்றும் மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று கொள்வதாக அவ்வமைப்பு உறுதியளித்துள்ளது. நான்கு சந்ததிகளாக அரசின் அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியின் நடவடிக்கையால் தற்போது மகிழ்ந்துள்ளனர். பல மாதங்களாக திறக்கப்படாத கழிப்பறையை, திருமலையாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் திறந்துள்ளது.
கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு, தண்ணீர் வசதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், சாலை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ள மாவட்ட நிர்வாகம், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.