கோவை: நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத எண்பத்து ஐந்து சதவீதனருக்கும் நிவாரணம் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோவை: ஊரடங்கு காலத்தில் ஊதியம் தர மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு சார்பில் மனு அளித்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உள்ளிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் ஊதியத்தை நிறுத்துவதோ, வேலையை பறிப்பதோ கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆனால், அரசின் அறிவிப்பை சில நிறுவனங்கள் பின்பற்றுவதாக தெரியவில்லை.
சிறு குறு நிறுவனங்கள் ஊதியம் தர இயலவில்லை என்பதில் நியாயம் உள்ளது. ஆனால், பெரு நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி ஊதியம் தர மறுப்பது தொழிலாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவை சிட்கோ பகுதியில் உள்ள இன்டோசெல் நிறுவனம் ஊரடங்கு காலத்திற்கான ஊதியத்தை மறுத்துள்ளது. இதனையடுத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஊரடங்கு கால ஊதியத்தை பெற்று தர வலியுறுத்தி மனு அளித்தனர்.
முன்னதாக அவர்கள் அளித்த மனுவில், ஊரடங்கு காலத்தில் ஊதியம் தர வேண்டும் என்கிற உத்தரவு எங்களுக்கு பொருந்தாது என நிர்வாகம் தெரிவிக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தினர்.
இதேபோல, கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கோவை பி.கே.புதூரில் செயல்படும் கேரள ரோடுவேஸ் நிறுவனம் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தர மறுக்கிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முழு ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.