கோவை: வால்பாறையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க திடீரென ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர் தடுப்பணை விரைவில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தார்.
கோவை: வால்பாறையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க திடீரென ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர் தடுப்பணை விரைவில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக அக்காமலை வனப்பகுதியில் கருமலை தேயிலை தோட்டத்தில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இயற்கை உந்துசக்தி மூலம் வால்பாறையில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி நீர் வந்து சேருகிறது.

இங்கிருந்து வால்பாறை நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறை நகருக்கு நீர் வினியோகம் முறையாக கிடைக்கவில்லை. இதனை முன்னிட்டு வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் அக்காமலை தடுப்பணையை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர், அக்காமலை தடுப்பணை விரைவில் தூர்வாரப்படும் என்றார். மேலும், அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதற்காக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்படும் என்றவர், மழைக்காலம் வரும் முன் இப்பணிகள் நடைபெற்று வால்பாறை நகருக்கு தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும் கோ ஆப்பரேட்டிங் காலனியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் முறையான சுத்திகரிப்பு பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நகராட்சி ஆணையர் ஆய்வின் போது நகராட்சி அலுவலர் ரகுபதி உடனிருந்தார்.