கோவை: கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளுடன் மே 4 முதல் 17-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுபாடுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
கோவை: கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளுடன் மே 4 முதல் 17-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுபாடுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநில அரசுகள் மதுபானக் கடைகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டன. பல மாநிலங்களில் மதுபானப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக டெல்லியில் கொரோனா சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் மதுபானங்கள் கடுமையாக விலையேற்றப்பட்டன என்றாலும் விற்பனையில் மட்டும் குறைவு இல்லை.
இதேபோல, தமிழகத்திலும் 7 -ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது எனச் சில பொதுநல வழக்குகள் பதியப்பட்டன. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
டாஸ்மாக் வழக்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி இருந்தார். அப்போது தமிழக அரசு தரப்பில், `டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது. டோர் டெலிவரியும் செய்ய முடியாது. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவே மதுபானம் வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது. நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றால் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாகவே ஒரு நபருக்குக் குறிப்பிட்ட அளவுதான் மது விற்பனை என்றும் வயது வாரியாக நேரக் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் முன்பு குவிந்ததால் சமூக இடைவெளி எல்லாம் காற்றில் பறந்தது. டாஸ்மாக் முதல்நாள் வசூலும் ரூ.170 கோடி என்ற அளவில் இருந்தது. இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு வசூல் நடைபெற்றது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதாகவும், அதனால் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில அமைப்புகளும் வழக்கறிஞர்களும் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர்.
இதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதாடியுள்ளார். இவர் ஆஜரானது ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது என்கிறார்கள் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நேற்று சிறப்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று மதியம் வீடியோ விசாரணைக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அடங்கிய சிறப்பு அமர்வு முன் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு சார்பில் உதவி அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டே வாதாடினார். மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி இருந்தார். பிற வழக்கறிஞர்கள், அட்வேகேட் ஜெனரல் உட்பட பலர் சட்ட பிரச்சனைகள் குறித்து ஏ.ஆர்.எல்.சுந்தரேசனிடம் ஆலோசனை கேட்பார்கள். அவரே மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டதற்கு சம்மதித்து மக்கள் நலம் சார்ந்த இந்த வழக்கில் ஆஜரானது அரசு தரப்புக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது” என்றனர்.
வழக்கு விசாரணையில் ம.நீ.ம தரப்பு தமிழகத்தில் நீதிமன்றம் முன்னர் தெரிவித்த நிபந்தனைகள் அரசால் டாஸ்மாக் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை என ஆதாரங்களோடு வாதாடியது. தமிழக அரசு தரப்பு, 40 நாள்கள் இடைவெளி காரணமாக கூட்டம் அதிக அளவில் வந்தது. இனி அப்படி இருக்காது எனத் தெரிவித்தது. எனினும் அரசின் செயல்பாட்டால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், தமிழகத்தில் ஊடரங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்யவேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.