கோவை: கோவையில் தங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்ததற்காக இந்து முன்னணியினர் தாக்கியதாக திமுக வார்டு செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: கோவையில் தங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்ததற்காக இந்து முன்னணியினர் தாக்கியதாக திமுக வார்டு செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் செல்வபுரத்தில் திமுகவின் 77வது வார்டு செயலாளராக உள்ள மதியழகன் (56), கொரோனா நிவாரணப் பொருட்களை விநியோகித்ததற்காக அவரது வீட்டில் நேற்று மாலை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 10 பேர் கொண்ட கும்பல் அவரது மகன் மனோஜ் குமார் (30) மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மதியழகன் தெரிவிக்கையில், இந்த திட்டத்தின் கீழ் திமுக அறிவித்த எண்ணுக்கு அழைப்பு விடுத்த மக்களுக்கு மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
"திமுக தலைமையகத்திலிருந்து தங்களுக்கு வழங்கப்பட்ட 30 பேர் பட்டியலை கொண்டு 77வது வார்டில் நிவாரண பொருட்கள் விநியோகம் செய்து வந்ததாகவும் அதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்று கூறிய அவர், இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா குழுக்களைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னையும் தனது மகனையும் கடுமையாக தாக்கியதால் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
மேலும், மதத்தின் அடிப்படையில் நிவாரணம் வழங்காமல், இந்த திட்டத்தின் மூலம் உதவிக்கு திமுகவை அணுகிய அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்தி மத சாயம் சேர்ப்பதாக திமுக வார்டு செயலாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.