கோவை: கோவையில் நாளை முதல் மதுக்கடை திறக்கப்பட உள்ள நிலையில், வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து பூஜையிட்டு மதுவிற்பனைக்கு கடையை ஊழியர்கள் தயார் செய்துள்ளனர்.
கோவை: கோவையில் நாளை முதல் மதுக்கடை திறக்கப்பட உள்ள நிலையில், வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து பூஜையிட்டு மதுவிற்பனைக்கு கடையை ஊழியர்கள் தயார் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 295 டாஸ்மாக் மதுபான கடைகளில் 207 கடைகள் மட்டுமே நாளை திறக்கப்பட உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 88 மதுபான கடைகள் திறக்க படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அருகில் உள்ள மற்ற மதுபான கடைகளில் கூடுதல் பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மதுபானங்களை வாங்க 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், 40ல் இருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு மணி முதல் மூன்று மணி வரையும் அதற்கு கீழ் உள்ளவர்கள் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை மதுபானங்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுக்கடைகள் முன்பாக பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. தனிமனித இடைவெளியுடன் மதுபானம் வாங்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தில் உள்ள மதுக்கடையில் இன்று வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து ஊழியர்கள் பூசையிட்டு, மதுவிற்பனைக்கு மதுக்கடையை தயார் செய்தனர்.
குளத்துபாளையத்தில் மதுபான கடை எண் 1773 மதுக்கடை மூடப்பட்ட நிலையில், 44 நாட்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படுவதால் இன்று கடையை ஊழியர்கள் தயார் செய்துள்ளனர். அப்போது, வாழைமர தோரணம் மற்றும் பூசை என ஊழியர்கள் அசத்தியுள்ளனர். இன்று மாலை மதுக்கடைகளுக்கு சரக்குகள் இறக்கப்பட்டு நாளை காலை முதல் மதுவிற்பனையானது தொடங்க இருக்கின்றது.