கோவை: தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க கூடாது என வலியுறுத்தி பா.ம.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க கூடாது என வலியுறுத்தி பா.ம.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கடந்த 43 நாட்களாக அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுபான கடைகள் முழுவதும் தமிழகத்தில் மூடப்பட்டது.
இந்நிலையில், அண்டை மாநிலங்களான பெங்களூரு மற்றும் ஆந்திராவில் நேற்று முன்தினம் கடைகள் திறக்கப்பட்டதால் தமிழக எல்லைப் பகுதிகளில் மதுபானங்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அண்டை மாநிலங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்கும் நோக்கில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட பா.ம.கவினர் நாளை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய அக்கட்சியின் மாவட்ட தலைவர் குமார் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மதுவிலக்கை வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த இது சரியான தருணம் என அன்புமணி ராமதாசும் வலியுறுத்தி உள்ள நிலையில் இந்த கொரோனா காலகட்டம் மதுவிலக்கை அமல்படுத்தச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மதுவிற்கு அடிமையான 99% பேர் மது இல்லாமல் வாழ முடியும் என்ற மனநிலைக்கு மாறி உள்ளதால் இந்த நேரத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது எனவும் கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் சமூக தொற்று பரவி உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதனால் நாளை கடைகள் திறக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.