தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்.
கோவை: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல அரசின் சார்பில் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நோயாளிகள் எந்த சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு சென்றாலும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. . அதேபோல, நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படியிருக்க கோவை அவிநாசி சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்காக சென்ற நோயாளியிடம் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ரூபாய் 40,000 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி தொடரும் குற்றச்சாட்டையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது:-
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள அரசு அங்கீகரித்த கட்டணம் ரூபாய் 4,500.
அந்த 4500 ரூபாய் தமிழக அரசால் மருத்துவமனைகளுக்கு திருப்பி அளிக்கப்படும், என தெரிவித்துள்ளார். எனவே, தனியார் மருத்துவமனைகள் யாரும் பரிசோதனைக்கு வரும் மக்களிடம் பணம் வசூலிக்க கூடாது. மேல் சிகிச்சைக்கான தொகையை அவர்கள் மக்களிடம் பெற்று கொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கூறுகையில்:-
கொரோனா பரிசோதனைக்கு அரசாங்கம் நிர்ணயித்த 4500 ரூபாய் மட்டுமே வசூலிக்கபடுகிறது. அதேபோல
சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் 4500 ரூபாய் கட்டணத்தை அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு திரும்ப தருவது குறித்து எந்த தகவலும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெளிவான விளக்கம் கேட்டு அதன்படி பரிசோதனை தொகையை வசூலிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.