முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - கள ஆய்வுக்குழு அலுவலர்கள்
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக, அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநா் புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப. அவர்கள், சிட்கோ மேலாண்மை இயக்குநா் ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளா் ச.பிரசன்னாராமசாமி அவர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், கள ஆய்வுக்குழு அலுவலர்கள் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இப்பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, காவல்துறையினர், மற்றும் பணிகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாநகராட்சியிலுள்ள 12 அம்மா உணவகங்களில் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளியை அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை தவறாது மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினியினை தினசரி 3 முறை தெளிக்கும் பணிகளையும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கள ஆய்வுக்குழு அலுவலா்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (முத்திரைத்தாள்) ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலா் (கலால்) எம்.எஸ்.கலைவாணி, நகர் நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார் , காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ்பாபு, துணை காவல் கண்காணிப்பாளர், என்.பிரேமானந்தன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.