கோவை: வால்பாறையில் காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்நிலையில் முடீஸ் குரூப் நிர்வாகத்திற்குட்பட்ட முத்துமுடி தேயிலை தோட்டத்தில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த காட்டு யானையை பார்வையிட்டனர். தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் சுகுமார் யானையின் உடல் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

காட்டு யானையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இறந்த யானையின் உடலின் முக்கிய பாகங்கள் சேகரிக்கப்பட்டு கோவை வன உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பெண் யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும் நோயினால் இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த யானை சில நாட்களுக்கு முன் கேரள பகுதியிலிருந்து வந்துள்ளதாக தெரிவித்த வனத்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.