கோவை: கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் 50 லட்சம் உணவு பொட்டலங்கள் தற்போது வரை வழங்கப்பட்டு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் 50 லட்சம் உணவு பொட்டலங்கள் தற்போது வரை வழங்கப்பட்டு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 31 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்தியாவில் தற்போது வரை 31,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1000 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 7000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் 50 லட்சம் உணவு பொட்டலங்கள் தற்போது வரை வழங்கப்பட்டு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் தற்போது வரை 9 லட்சம் பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் முக கவசம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் மருத்துவ உதவிகள் மூலம் 12 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக கூறிய அவர், பாஜக சார்பில் ஒட்டுமொத்தமாக 86 லட்சம் மக்கள் பயனடைந்து உள்ளனர் என்றார்.
மேலும், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், பிரதமர் அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக விரைவில் தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியும் என்று தெரிவித்தார்.
பின்னர் கோயில்கள் குறித்து நடிகை ஜோதிகா பேசிய விஷயம் சர்ச்சையாக உருவெடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தற்போதைய சூழலில் எந்த மதத்தையும் சாதியையும் ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜோதிகா அந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்றார்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது எனவும் பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல, நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 9384898353 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் பயனடைய வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.