கோவை: கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதளத்தின் நிறுவனர் கைது செய்துள்ளது பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக் குறியாக்குவதாக மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதளத்தின் நிறுவனர் கைது செய்துள்ளது பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக் குறியாக்குவதாக மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;-
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சரியாக நடைபெறவில்லை எனவும் கொரோனாவை தடுக்க தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், அதே போல் பொது விநியோக திட்டத்தில் ஒரு சில அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாகவும் சிம்ப்ளிசிட்டி என்னும் இணையதள பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை வெளியிட்ட காரணத்திற்காக அத்தளத்தின் நிறுவனர் டி.ஆன்ட்ரு சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். சிம்ப்ளிசிட்டி இதழின் பத்திரிகையாளர்கள் ஜெரால்டு மற்றும் பாலாஜி ஆகியோர் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இது கண்டனத்திற்குரியது.
மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா தொற்றின் நெருக்கடிக் காலத்திலும் அரசிடம் சம்பளம் வாங்காத அத்தியாவசிய பணியாளர்களாகப் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஜனநாயக விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் கவனக் குறைவையும், மெத்தனத்தையும் மக்களுக்குத் தகவலாக அளிக்கும் பத்திரிகையாளர்களுக்குச் சிறைத் தண்டனை விதிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.
இந்த ஊரடங்கு நேரத்திலும் தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதும், அவர்களின் குரல் வளையை நசுக்குவதும் இந்த அரசின் அராஜக போக்கைக் காட்டுகின்றது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக் குறியாக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சிம்ப்ளிசிட்டி இணையதள இதழின் நிறுவனரை விடுவித்து அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை உடனே திரும்பப்பெற்று அவர்களை விடுவிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.