கோவை: கோவையில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய பொதுமக்களிடம் மாநகர காவல்துறையினர் கலை நிகழ்ச்சியுடன் நூதன முறையில் மேற்கொண்ட விழிப்புணர்வு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கோவை: கோவையில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய பொதுமக்களிடம் மாநகர காவல்துறையினர் கலை நிகழ்ச்சியுடன் நூதன முறையில் மேற்கொண்ட விழிப்புணர்வு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோன வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்க தமிழக அரசும், சுகாதார துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் தொற்றின் தீவிரம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சுற்றி கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இது போன்று வெளியில் சுற்றும் பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல் துறையின் சார்பாக உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் லதா ஆகியோர் தலைமையில் காந்திபுரம் சிக்னல் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரைப்பட இயக்குனர் சூலூர் எஸ். சுரேஷ்குமார் குழுவினர் சாலையின் நடுவே நோயின் தீவிரம் குறித்து நடித்து காண்பித்தனர். அப்போது, அந்த பகுதி வழியாக தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளை காவல்துறையினர் நிறுத்தி வைத்து அறிவுரையை கூறிய அதே நேரத்தில், இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றதால் பொது மக்கள் தங்களின் தவறை உணர்ந்து இனி வரும் நாட்களில் தேவையில்லாமல் வெளியே வர மாட்டோம் என கூறிய படி அங்கிருந்து சென்றனர்.

பொதுமக்களிடம் இது போன்று நூதன முறையில் கோவை மாநகர காவல்துறையினர் மேற்கொண்ட விழிப்புணர்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.